• முகப்பு
  • .
  • .
  • .
  • .

புதன், 14 ஆகஸ்ட், 2013

மழைக்கு ஒதுங்கும் கவிதை





மழையில் நனைந்த என்னை
வீட்டிற்கு வெளியே 
நிற்க வைத்து முறைப்பாய்.

கோபத்தில் கடிந்துகொள்வாய்,
என்னையும் மழையையும்.

ஈரமான கைகளில் 
தேநீர் தருவாய், சூடாக.

அடுத்த நாளிலிருந்து 
குடை எடுத்து செல்ல 
மறக்காமல் நினைவூட்டுவாய்.

இவற்றிற்காக மட்டும்
நான் மழையில் நனைவதில்லை.

நீ
கூந்தல் உலர்த்திய
ஈரத் துண்டால் 
தலை துவட்டி விடுவாயே,
அதற்காகவும் தான் 

வெள்ளி, 30 செப்டம்பர், 2011

குறுவறைக்கிறுக்கல்கள்






(குறுவறை --> Cubicle )

--------------------------------------------------
நீ
அடிக்கடி
என்னைப் பார்க்கிறாய்,
அடிக்கடி
நேரம் பார்க்கிறாய்,
என் இதயம் 
ஒரு நொடி நின்றபின்பு
துடிக்கத் தொடங்குகிறது,
உன் கடிகாரம்
சில நொடிகள் தாமதமாய் 
ஓடுகின்ற 
காரணம் புரிகிறது.



என் 
இதயத்திலும்
நான்கு குறு அறைகள் உண்டு.
நான்கிலும்
கணினிக்கு பதிலாய்
கனி நீ.



நீ தட்டும் போது மட்டும்
இசைப்பலகையாய்
மாறிவிடுகிறது, 
விசைப்பலகை.



உன்னால் மட்டும் தான்
இப்படி
தினமும்
ஒரே சொல்லில்
கவிதை எழுதிச் செல்ல முடியும்.
வருகைப் பதிவேட்டில் 
கையொப்பம். 



தேநீர் இடைவேளைகளில்,
உன் கோப்பையிலிருந்து
தேநீர் பருகும் 
உதடு.
உன் உதட்டிலிருந்து
தேநீர் பருகும் 
கோப்பை.
------------------------------------------------

வியாழன், 24 பிப்ரவரி, 2011

♥ கவிதைக்கூடம் ♥





,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

♥ஆய்வகத்துக்குள்

நுழையும் முன்பே,

ஆய்வு செய்யத்

துவங்கிவிட்டேன்.

உன்னை.



♥ என்னருகில் வந்து

திருகு அளவியின் புரியிடைத்தூரம் பற்றி

கேட்கிறாய்.

எனக்குத் தெரிந்தது எல்லாம்

வெறும் 'இடை'த்தூரம்தான்.



♥உன் கன்னக் குழியாடியின் மேல்,

என் முத்தங்களின் குவியதூரம் எவ்வளவு?.



♥ ஊசலின் அலைவு நேரத்தைக் கவனிக்கும் நீ

ஊசலாடும் என் இதயத்தையும் கொஞ்சம் கவனி.



♥தவறாமல்

தவறான திசையையே

காட்டுகிறது.

காந்த மானி.

உன் காந்தக் கண்களை

வேறு பக்கமாய்த் திருப்பு.

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,